எமது நாகமணி- செல்லம்மா குடும்பத்தின் ‘முதல்வன்’ மூத்த மகன். மகான் என்று மதிப்புடன் அழைக்கப்பெற்ற மகேந்திரன் அவர்கள் கொழும்பு ஜா-எல நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்
எங்கள் குடும்பத்தின் பொறுப்பையும் பின்னர் தனது குடும்பத்தின் பொறுப்பையும் ‘தலைமேல்’ சுமந்து தன்மானத்துடன் வாழ்ந்த எமது மூத்த அண்ணர் தனது வாழ்நாளில் தனது இரண்டு கண்களாலும் தான் பெற்ற அறிவுக் கண்களாலும் இந்த உலகத்தைப் பார்த்து வாழ்ந்தவர்.
பதுளையில் 1944ம் ஆண்டு பிறந்து பதுளை ஊவாக் கல்லூரியில் கற்று பின்னர் யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் பயின்றவர்.
பின்னர் தலவாக்கலை மற்றும் இறக்குவானை ஆகிய இடங்களில் அரச பெருந்தோட்டத்துறையில் தலைமை எழுதுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மார்க்சிச சிந்தனையில் ஊறிக் கொள்வதற்காக அந்த கருத்துக்கள் சார்ந்த நூல்களை விரும்பிப் படித்தவர்.
உடலும் உள்ளமும் வெளுத்தவராகத் திகழ்ந்த எம் மூத்த முதல்வனை இழந்த துயரத்தில் குடும்பத்தினராகிய நாம் மட்டுமல்ல. நான்கு திசைகளிலும் இருந்து எம்மை அழைக்கும் அவரது நண்பர்களும் மூழ்கிப்போயுள்ளோம்