இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், காஸாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது என்றும், அனைத்து நாடுகளும் தீவிர நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காஸா மீதான போர் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வரும் பெட்ரோ, கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிகளுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதிலிருந்து, இஸ்ரேல் – கொலம்பியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியிருந்தது.
காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 34,000-ஐ கடந்துள்ளது.
பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருவதாகவும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனத்தை விடுவிக்கக் கோரி மாணவர்கள் ஈடுபட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.