Home இந்தியா செய்திகள் கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

by admin

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான சான்றிதழில், திடீரென பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கியிருக்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.

முன்பு, கரோனா தடுப்பூசிக்கான சான்றிதழில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன், “ஒன்றாக இணைந்து, இந்தியா கரோனாவை தோற்கடிக்கும்” என்று வாசகம் இடம்பெற்றிருக்கும். தப்போது இந்த வாசகம் மட்டும் இருக்கிறது. பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை.

கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு அரிதினும் அரிதாக ரத்தம் உறைதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக லண்டன் நீதிமன்றத்தில், அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸென்கா ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் பலரும், தங்களது தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இருந்ததே என்று நினைவுக்கு வர அதனை துழாவியபோது, தற்போது பதிவிறக்கம் செய்யும் சான்றிதழ்களில் மோடியின் படம் இல்லாமலிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த இரண்டு நாள்களாக இது குறித்து எக்ஸ் தளத்தில் பலரும் தொடர்ச்சியாக பதிவிட்டுவருகிறார்கள். அண்மையில் எனது தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து பார்த்தேன், எனக்கு ஆச்சரியம், அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்று சிலர் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர, பலரும் அதற்கு ஆம் என்று பதிலளித்திருக்கிறார்கள் தங்களது மோடி படம் இல்லாத தடுப்பூசி சான்றிதழை இணைத்து.

உலகையே உலுக்கிய கரோனாவுக்கு தடுப்பூசி என்ற பெயரில் அறிமுகமான கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் எனும் அரிதிலும் அரிதான பாதிப்பு ஏற்படுவதாக, அதனை தயாரித்த நிறுவனம் லண்டன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருப்பது ஒருபக்கம் பேசுபொருளான நிலையில், மறுபக்கம் தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டிருப்பதும் விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.

ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டு புகைப்படம் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும் மற்றொரு தரப்பில் கூறப்பட்டது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டே பிரதமர் படம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி விவாதத்துக்கு உள்ளான நிலையில், இதனை பேசுபொருளாக்கியிருக்கிறார்கள், இதற்கும் படம் நீக்கப்பட்டதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபோலவே, கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவாவில் பேரவைத் தேர்தல் நடைபெற்றபோதும், இந்த மாற்றம் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy