ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பினை எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தில் ஐ.தே.க தலைமையிலான அரசியல் கூட்டணி மற்றும் சின்னம் என்பன குறித்து அறிவிப்புகள் வெளிப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் மே தின மேடையில் ஏறுவார்கள் என்றும் சிறிகொத்தா தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான அண்மைய சந்திப்பின் போதே ஜனாதிபதி தேர்தல் தின அறிவிப்பு குறித்து மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர் இடம்பெற்ற நான்காவது சந்திப்பாகவே இது அமைந்தது.
ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இதன் போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது குறித்து பஷில் ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வியெழுப்பியுள்ளார். ஜூலை மாதத்தில் இதற்கான பதிலை கூறுவதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் கூட்டணி குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டம் மருதானையில் இடம்பெறவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் ஐ.தே.க தலைமையிலான அரசியல் கூட்டணி மற்றும் சின்னம் என்பன குறித்து அறிவிப்புகள் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் ஏறுவார்கள் என சிறிகொத்தா தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட உள்ள சைக்கிள் யாத்திரை அநுராதபுரத்தை சென்றடைந்தபின்னர் , அங்கிருந்து கொழும்பை நோக்கிச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.