கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கும் திட்டத்திற்காக வரும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படுமென்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க முடியாமல் தவிக்கும் பள்ளிகள் மற்றும் சமூக குழுக்களுக்கு இந்த நிதி உதவிகரமாக இருக்குமென்றும், இத்திட்டம் மூலம், கூடுதலாக 4 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் ஏப்ரல் 16இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கனடாவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி, நான்கில் ஒரு குழந்தை, அதாவது சுமார் 1.8 மில்லியன் குழந்தைகள், போதிய உணவு கிடைக்காமல் பள்ளிக்கு வந்து செல்வதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்காக தேசிய அளவிலான உணவுத் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமலாகிறது.
கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வரும் சூழலில், வெறும் 21 சதவிகித குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தால் பயனடைகிறார்கள்.நன்கொடையாக வரும் தொகை மற்றும் மாகாண அரசின் பங்களிப்பு மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் சூழலில், அதை அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் ழுழு உணவு வழங்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் குறித்த வாக்குறுதியை அளித்திருந்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக 1 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.