டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை இன்று வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேலும் 4 நாட்களுக்கு கெஜ்ரிவாலின் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை டில்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரத்தில் டில்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும், நீதிமன்றம் எவ்வாறு, இதில் தலையிட முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.