காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.
நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போருக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்த போராட்டம் நியூயார்க் பல்கலைக்கழகம், மினசோட்டா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஓஹியோ மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம்,பெர்க்லி தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், டெக்சாஸ்-ஆஸ்டின் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், எமர்சன் கல்லூரி, எம்ஐடி டப்ட்ஸ் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், தி நியூ ஸ்கூல் லாஸ் ஏஞ்சல் என 15 பல்கலைக்கழகத்திற்கு பரவியுள்ளது. இந்த போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க அமெரிக்கா அரசு காவல் துறைக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமான மாணவர்களை காவல்துறை கைது செய்தனர்.