Home விளையாட்டு செய்திகள் நாங்கள் தோல்வியை சந்தித்தது அந்த 2 ஓவர்களில்தான் – சுப்மன் கில் வருத்தம்

நாங்கள் தோல்வியை சந்தித்தது அந்த 2 ஓவர்களில்தான் – சுப்மன் கில் வருத்தம்

by admin

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரின் 40-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 88 ரன்களையும், அக்சர் படேல் 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி இறுதி வரை போராடி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 மட்டுமே அடித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. குஜராத் அணி சார்பாக சாய் சுதர்சன் 65 ரன்களையும், டேவிட் மில்லர் 55 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்:- உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் நல்ல ஒரு கிரிக்கெட்டை விளையாடினோம். இருப்பினும் இறுதியில் தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது. எங்கள் அணியில் உள்ள அனைவருமே சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர். 224 ரன்கள் என்கிற இலக்கினை துரத்தும்போது எவ்வித திட்டத்தையும் பற்றி பேச தேவையில்லை. மைதானத்தில் இறங்கியதில் இருந்து ரன்களை குவிக்க வேண்டியது மட்டும்தான் நம்முடைய வேலை.

ஐ.பி.எல். போட்டிகளில் தற்போது இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பது ஒவ்வொரு அணிக்கும் கூடுதல் சவுகரியத்தை அளிக்கிறது. இந்த விதிமுறையின் மூலம் விக்கெட்டுகள் ஆரம்பத்திலேயே விழுந்தால் கூட பேட்டிங் ஆர்டரின் ஆழம் அதிகரிப்பதனால் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோருக்கு செல்கின்றனர். இந்த போட்டியில் 200 முதல் 210 ரன்களுக்குள் அவர்களை நிறுத்தி இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் போட்டியின் கடைசி 2 ஓவர்களில் அதிக அளவில் நாங்கள் ரன்களை விட்டுக் கொடுத்ததாலே இந்த தோல்வியை சந்திக்க நேர்ந்தது. நிச்சயம் இனி வரும் போட்டிகளில் இது தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy