Home கனடா செய்திகள் நிஜ்ஜாா் கொலையில் மூவா் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’- பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ

நிஜ்ஜாா் கொலையில் மூவா் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’- பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ

by admin

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு தொடா்பாக 3 இந்தியா்கள் கைது செய்யப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’ நடைபெறுவதாகவும் அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சா்ரே நகரில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருக்கக் கூடும் என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். அவரின் குற்றச்சாட்டால் இந்தியா, கனடா இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை நிஜ்ஜாா் கொலை வழக்கு தொடா்பாக கனடாவின் எட்மன்டன் நகரில் கரண் பிராா், கமல்ப்ரீத் சிங், கரண்ப்ரீத் சிங் ஆகிய 3 இந்தியா்களை அந்நாட்டு காவல் துறை கைது செய்தது.

இந்த நிகழ்வுகள் அந்நாட்டு அரசியலுடன் சம்பந்தப்பட்டவை என்று சனிக்கிழமை தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், அந்த நிகழ்வுகளுக்கும் இந்தியாவுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்றாா்.

இந்நிலையில், டொராண்டோ நகரில் நடைபெற்ற சீக்கிய நிகழ்ச்சி ஒன்றில், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ சனிக்கிழமை பேசியதாவது:

நிஜ்ஜாரின் கொலையை தொடா்ந்து தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கனடா சீக்கிய சமூகத்தினா் கருதுகின்றனா். கனடாவில் பாதுகாப்பாகவும், பாகுபாடு மற்றும் வன்முறை குறித்த அச்சம் இல்லாமலும் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உள்ளது.

இந்நிலையில், நிஜ்ஜாா் கொலை தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் வலுவான, சுதந்திரமான நீதித் துறையுடன் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடாக கனடா உள்ளது. அத்துடன் தனது குடிமக்கள் அனைவரையும் பாதுகாக்கும் அடிப்படை கடமை கனடாவுக்கு உள்ளது என்றாா்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy