கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியோ மாகாணத்தில் ஒன்றின் மீது ஒன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இந்திய தம்பதி இருவர், அவர்களின் மூன்று மாத பேரக் குழந்தை உள்பட நால்வர் பலியாகியுள்ளதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுபானக் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவலர்கள் துரத்தி சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டொரோண்டோவுக்கு கிழக்கே விட்பி பகுதியிலுள்ள நெடுஞ்சாலை 401-ல் நிகழ்ந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வரும் இறந்ததாகக் காவலர்கள் குறிப்பிட்டனர்.
60 வயது மற்றும் 55 வயதுள்ள தம்பதி இந்தியாவில் இருந்து கனடாவுக்கு வந்துள்ளதை ஒண்டாரியோ மாகாண சிறப்பு விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.
அந்த இணையர்களின் 3 மாதங்களே ஆன பேரக்குழந்தை விபத்தில் உயிரிழந்ததாக குறிப்பிட்ட அதிகாரிகள் தம்பதியின் பெயர்களை வெளியிடவில்லை.
அதே வாகனத்தில் பயணித்த குழந்தையின் பெற்றோர் காயங்களோடு தப்பியுள்ளனர்.
மதுபான கடையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரும் அந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குற்றவாளியைக் காவலர்கள் துரத்திவந்த போது குற்றவாளி ஓட்டிவந்த கார்கோ வேன் பாதை மாறி சாலையின் எதிர்த்திசையில் பயணிக்க தொடங்கியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது ஆறு வாகனங்களுக்கு மேல் ஒன்றின் மீது ஒன்று மோதியுள்ளன. அதனால் போக்குவரத்து சில மணி நேரங்களுக்குப் பாதிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாக கனடிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.