கண்டி – உடப்பளாத்த பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வகுகவ்பிட்டிய கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்று மின் கசிவினால் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. இதனால் அந்த வீட்டில் வசித்தவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் (25) வியாழக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கிராம சேவகருக்கும் கம்பளை உடப்பளாத்த பிரதேச செயலகத்துக்கும் புஸல்லாவை பொலிஸாருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பம் சுமார் 51 வருடங்கள் பரம்பரையாக அந்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொடுப்பதற்கு பல சமூக சேவையாளர்கள் முன்வந்துள்ளனர்.
தனியாக வீட்டை அமைப்பதற்கான சொந்த காணியை பெற்றுக்கொள்வதற்கு கிராமசேவர் ஊடாக உடப்பளாத்த பிரதேச செயலாளருக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்கிரையான வீட்டில் 3 பேர் வசித்து வந்துள்ளனர். அவர்களில் புஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயில்கின்ற மாணவியும் ஒருவராவார். அவரது கற்றல் உபகரணங்கள் உட்பட உடைகள் அனைத்தும் தீயில் முற்றாக எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பாதிக்கப்பட்ட இக்குடும்பத்துக்கு பலர் உதவ முன்வந்துள்ளனர். அதேபோன்று இவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்களினது ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.