Home விளையாட்டு செய்திகள் ராஜஸ்தான் – டெல்லி இடையேயான போட்டி 4வது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாண்டிங்

ராஜஸ்தான் – டெல்லி இடையேயான போட்டி 4வது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாண்டிங்

by admin

ஐ.பி.எல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முன்னதாக இந்த போட்டியில் ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் பவுல்ட், ஹெட்மயர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ராஜஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் இன்னிங்ஸ் முடித்ததும் வெஸ்ட் இண்டீஸின் ஹெட்மயருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் நன்ட்ரே பர்கரை இம்பேக்ட் வீரராக பந்து வீசும் இன்னிங்க்ஸில் ராஜஸ்தான் பயன்படுத்தியது.

ஆனால் முதல் ஓவரின் 5-வது பந்தின் முடிவில் களத்தில் இருந்த இந்திய வீரர் சுபம் துபேவுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் பவலை சப்ஸ்டிடியூட் வீரராக பீல்டிங் செய்ய வருமாறு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அழைத்தார். அதனால் அதிருப்தியடைந்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இங்கே என்ன நடக்கிறது? என கேட்டு 4வது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

குறிப்பாக பிளேயிங் லெவனில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில் இப்போது மட்டும் எப்படி 4 வெளிநாட்டு வீரர்கள் பீல்டிங் செய்ய முடியும்? என்று பாண்டிங் கேள்வி எழுப்பினார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. இதையடுத்து பாண்டிங் மற்றும் கங்குலியிடம் 4வது நடுவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் சஞ்சு சாம்சன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த மாற்றத்தை செய்துள்ளார் என கூறினார்.

ஐ.பி.எல். விதிமுறை 1.2.6-ன் படி பிளேயிங் லெவனில் நான்குக்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் வேறொரு வெளிநாட்டு வீரர் பிளேயிங் லெவனில் இடம் பெற்றிருக்கும் எந்த வீரருக்கு பதிலாகவும் சப்ஸ்டியூட் வீரராக செயல்பட முடியும். எனவே அந்த விதிமுறைப்படி ராஜஸ்தான் அணி எந்த தவறும் செய்யவில்லை என்று 4வது நடுவர் விளக்கம் கொடுத்ததால் பாண்டிங் மற்றும் கங்குலி ஆகியோர் அமைதியானார்கள் இதையடுத்து ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

விதிமுறையின் படி ராஜஸ்தான் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது பவுல்ட், பர்கர், பட்லர் ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே (பிளேயிங் லெவன்) அணியில் இருந்தனர். எனவே சுபம் துபேவுக்கு பதிலாக ரோவ்மன் பவலை (4வது வெளிநாட்டு வீரராக) சப்ஸ்டியூட் வீரராக அணிக்குள் கொண்டு வர முடியும். ஹெட்மயருக்கு பதிலாக இம்பேக்ட் வீரராகதான் பர்கர் களம் புகுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy