இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்கும்பட்சத்தில் அதற்கு பதிலாக வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது எனவும் தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பக்கெட் வாளி, பலாப்பழம், திராட்சைப் பழம் சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்ததைத் தொடர்ந்து, ஒற்றைத் தலைமை பிரச்னை பெரிதானது. அதிமுக பெயர், சின்னத்துக்கு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.