‘எனது ஐபிஎல் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய எனக்கு இன்னும் நான்கு, ஐந்து மாதங்கள் உள்ளன’ என்று 18 ஐபிஎல் அத்தியாயங்களிலும் தொடர்ச்சியாக விளையாடி வந்துள்ள எம். எஸ். தோனி தெரிவித்தார்.
2008 இலிருந்து 2015 வரையும் 2018 இலிருந்து 2025 வரையும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய எம்.எஸ். தொனி இடையில் 2016, 2017 அத்தியாயகளில் ரைசிய் பூனே சுப்பர்ஜயன்ட் அணிக்காவும் விளையாடி இருந்தார்.
2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய வருடங்களில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் சம்பியனாக்கிய பெருமை எம்.எஸ். தோனியை சாருகிறது.
18 ஐபிஎல் அத்தியாயங்களிலும் விளையாடிவந்துள்ள எம்.எஸ். தோனி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற போட்டியுடன் தனது எதிர்காலம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை, தோனி ஒய்வுபெறமாட்டார் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் சில இரசிகர்கள் அஹமதாபாத் அரங்கில் காணப்பட்டனர்.
அணிகள் நிலையில் முதலாம் இடத்திலுள்ள குஜராத் டைட்டன்ஸை 83 ஓட்டங்களால் கடைநிலையில் உள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் தனது கடைசிப் போட்டியில் வெற்றிகொண்டு 18ஆவது அத்தியாயத்திலிருந்து விடைபெற்றது.
அப் போட்டி முடிவில் வர்ணனையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தோனி, ‘எனது ஐபிஎல் எதிர்காலம் குறித்து நான் முடிவு செய்ய இன்னும் நான்கு, ஐந்து மாதங்கள் உள்ளன. நான் ரஞ்சிக்கு திரும்பிச் செல்வேன். நான் வீட்டிற்கு மிக நீண்டகாலமாக செல்லவில்லை. அடுத்த இரண்டு மாதங்கள் மோட்டார் சைக்கிளில் மகிழ்ச்சிகரமாக சுற்றிவரவேண்டும். அதன் பின்னர் முடிவெடுப்பேன்’ என்றார்.
‘எல்லாம் எனது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும். இதற்கு முன்னரும் இதைத் தான் நான் கூறிவந்துள்ளேன். அதையே திருப்பிக் கூறுகிறேன். நான் தீர்மானிப்பதற்கு நான்கு, ஐந்து மாதங்கள் எனக்கு இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவசரப்படத் தேவையில்லை’ என தோனி கூறினார்.
இன்னும் இரண்டு மாதங்களில் தனது 44ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள தோனி, 2026இல் 19ஆவது ஐபிஎல் அத்தியாயம் ஆரம்பமாகும்போது 45 வயதை அண்மித்திருப்பார்.
‘ஒவ்வொரு வருடமும் உடலை திடகாத்திரமாக வைத்திருக்க 15 வீதம் மேலதிக முயற்சி எடுக்கப்படுகிறது. இது உயர்மட்ட கிரிக்கெட் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இது தொழில்முறை கிரிக்கெட். எனவே மிகச் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். எப்போதும் ஆற்றல் வெளிப்பாடு மட்டும் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. ஆற்றல் வெளிப்பாடு காரணமாக வீரர்கள் ஓய்வுபெற ஆரம்பித்தால் சிலர் 22 வயதிலேயே ஓய்வுபெற ஆரம்பித்து விடுவார்கள்.
‘உங்களிடம் எத்தகைய கிரிக்கெட் தாகம் இருக்கிறது என்பதே முக்கியம். எத்தகைய உடற்தகுதியைக் கொண்டிருக்கிறீர்கள், எந்தளவு உங்களால் அணிக்கு பங்களிக்க முடியும் என்பதும் மற்றைய முக்கிய அம்சங்களாகும். அணிக்கு நான் தேவையா இல்லையா என்பதை சிந்தித்துப்பார்ப்பது முக்கியம். அதற்கு போதுமான நேரம் இருக்கிறது. நான் ரஞ்சிக்கு திரும்பிச் செல்வேன். நான் வீட்டிற்கு மிக நீண்டகாலமாக செல்லவில்லை. அடுத்த இரண்டு மாதங்கள் மோட்டார் சைக்கிளில் மகிழ்ச்சிகரமாக சுற்றிவரவேண்டும். அதன் பின்னர் முடிவெடுப்பேன்’ என தோனி தெரிவித்தார்.
‘இத்துடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டேன் என்று கூறவில்லை. அதேவேளை நான் திரும்பி வருவேன் என்றும் கூறவில்லை. எனக்கு போதுமான நேரம் இருக்கிறது. அப்படியானால் அதைப் பற்றி ஏன் சிந்திக்கவேண்டும். அதன் பின்னர் முடிவுசெய்யலாம்தானே’ எனவும் தோனி கூறினார்.
15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி உங்கள் காலைத் தொட்டு வணங்கியபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள் என வர்ணனையாளர் தோனியிடம் கேட்டபோது,
‘வயதாகிவிட்டதைப் போன்று உணர்ந்தேன். எங்கள் அணியில் இடம்பெறும் அண்ட்ரே சித்தார்த்திடம் உங்களுக்கு என்ன வயது என்று கேட்டேன். அவர் என்னைவிட 25 வயது இளையவராம். அதைக் கேட்டபோதுதான் எனக்கு நிஜமாகவே வயதாகிவிட்டது என எனக்குத் தோன்றியது’ என தோனி பதிலளித்தார்.