கொழும்பு – கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றிற்கு அருகில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் துப்பாக்கிதாரி பயணித்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பிரதேசத்திற்கு கடந்த 18ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் கடையில் இருந்த வியாபாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வியாபாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேச்தைச் சேர்ந்த 41 வயதுடைய பழக்கடை வியாபாரி ஒருவரே காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள், கார் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.