உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு இன்றுடன் (29) நிறைகிறது. இதுவரையான காலப்பகுதியில் வாக்களிக்காத அரச உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தபால்மூல வாக்களிப்புக்கு இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கான தபால்மூல வாக்களிப்புக்கு நான்கு நாட்கள் ஒதுக்கப்பட்டன.
இதற்கமைய கடந்த வியாழக்கிழமை (24), வெள்ளிக்கிழமை (25) ஆகிய தினங்களில் முதற்கட்டமாக நடைபெற்றது. அதேபோல் நேற்று மூன்றாவது நாளாக வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இறுதியாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இறுதியாக வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
தபால்மூல வாக்களிப்புக்கு ஒதுக்கப்பட்ட நான்கு நாட்கள் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதிபெற்ற அரச உத்தியோகத்தர்கள் தவறாமல் இன்றைய தினம் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிப்புக்கான காலவகாசம் இனி வழங்கப்படமாட்டாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தமது வதிவிட பகுதியில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.