Tuesday, July 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்குட்டிமணி - தங்கத்துரை உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கு நாளை வரை தடை!

குட்டிமணி – தங்கத்துரை உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கு நாளை வரை தடை!

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி மேற்படி உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன. இதன்போது, ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ், பொலிஸாரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். தொடர்ந்து, விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் அவர், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை நீதிவான் பிணையில் விடுவித்து நாளை புதன்கிழமை வரை வழக்கை ஒத்திவைத்தார். அதேவேளை, நாளை வரை உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கும் நீதிவான் தடை விதித்தார்.

1983 ஆம் ஆண்டு ஜூலை வன்முறையின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டமை இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமாகும். இந்த வரலாற்று நிகழ்வை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் சிலை திறப்பு விழா ஏற்பாடுகளால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments