எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திலிருந்து விலகவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கில், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அரசு அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்ததாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கமைய, ஆரம்ப வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் பல கட்டங்களாக சம்பளம் உயர்த்தப்பட்டதுடன், வரவிருக்கும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டம் மூலமும் சுமார் பத்தாயிரம் ரூபாவினால் சம்பளம் உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
முன்னர் 17,000 ரூபாவாக இருந்த அரசு சேவையின் குறைந்தபட்ச சம்பளம், அடுத்த ஆண்டாகும்போது 40,000 ரூபாவைத் தாண்டும் வகையில் கணிசமான அளவில் உயரும் என்றும் அவர் கூறினார்.
அரசு ஊழியர்கள் சம்பளம் குறித்த அழுத்தமின்றி கடமையையாற்றுவது திறமையான சேவைக்கு அவசியமான ஒன்றாகும் எனவும், தற்போதைய பொருளாதாரத்தால் தாங்கக்கூடிய அதிகபட்ச அளவில் இந்த சம்பளத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.


