பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான சட்டமூலம் வெகுவிரைவில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின்போது, வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவை அங்கீகாரத்துடன் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த நிபுணர் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரைகளுக்கு அமைவாக மிக விரைவில் சட்டமூலம் வெளியிடப்படும் என்றும், இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உறுதியுடன் இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


