இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், போர்க்கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் வெளியிடப்பட்ட ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் (OHCHR) புதிய அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்” – ஐநா அறிக்கை
‘நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் – நீதிக்கான நம்பிக்கையையும் சேர்த்து’ எனும் தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஆய்வுகள், பாதிக்கப்பட்டோருடனான சந்திப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
-
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இன்றும் அச்சுறுத்தல் மற்றும் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகின்றனர்.
-
பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் காரணமாகப் பல சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை.
-
“பாலியல் வன்முறை என்பது ஒருபோதும் முடியாத சித்திரவதை” என பாதிக்கப்பட்ட ஒருவர் தனது குமுறலை ஐநாவிடம் பதிவு செய்துள்ளார்.
தொடரும் தண்டனை விலக்கு (Impunity)
இலங்கையில் 1970 மற்றும் 80களில் நடந்த ஜே.வி.பி கிளர்ச்சிகள் முதல், 2009 வரை நீடித்த ஈழப்போர் வரை பாலியல் வன்முறை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டதாக ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், இராணுவமயமாக்கல் மற்றும் அவசரகாலச் சட்டங்கள் நீடிப்பதால், குற்றவாளிகள் எவ்வித பயமும் இன்றி நடமாடுவதாக ஐநா கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இலங்கையின் சட்டத்துறையில் போர்க்கால பாலியல் வன்முறையைத் தடுக்கப் போதுமான சட்டங்கள் இல்லை என்பதும், இதற்கான விசாரணைகள் அரிதாகவே நடப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐநா விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள்:
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது:
-
பகிரங்க மன்னிப்பு: அரசுப் படைகளால் இழைக்கப்பட்ட வன்முறைகளை ஒப்புக்கொண்டு, பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.
-
சட்ட சீர்திருத்தம்: நீதித்துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வந்து, குற்றவாளிகளைத் தண்டிக்கத் தனி விசாரணை அலுவலகத்தை உருவாக்க வேண்டும்.
-
பாதுகாப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த உளவியல் மற்றும் சமூக ஆதரவை உறுதி செய்ய வேண்டும்.
சர்வதேச சட்டங்களின்படி, போர்க்கால பாலியல் வன்முறை என்பது ஒரு ‘யுத்தக் குற்றம்’ ஆகும். இதனைத் தடுத்து நிறுத்தவும், நீதி வழங்கவும் இலங்கை அரசு கடமைப்பட்டுள்ளது என ஐநா ஊடகப் பேச்சாளர் ஜெர்மி லாரன்ஸ் (Jeremy Laurence) தெரிவித்துள்ளார்.


