மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் ‘தக்லைப்’. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது அதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசியது பின்னர் பெரும் சர்ச்சையானது. என்றாலும் அப்போது கமல்ஹாசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் சிவராஜ்குமார்.
இந்த நிலையில் சிவராஜ்குமார் திரையுலகில் அடி எடுத்து வைத்து 40 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவரை கன்னடத்தில் வாழ்த்தி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் கமல்ஹாசன். அந்த வீடியோவில், ”சிவாண்ணாவுக்கு (சிவராஜ்குமார்) நான் சித்தப்பா மாதிரி. அவரது தந்தை ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டிய அன்பு எதிர்பாராதது. சிவராஜ்குமாரை பொறுத்தவரை இந்த 40 ஆண்டுகள் எப்படி ஓடியதென்றே எனக்கு தெரியவில்லை. இன்றைக்கு அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிறார். இனியும் சாதிக்கப் போகிறார். அவரது வளர்ச்சி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார் கமல்ஹாசன்