கட்டுநாயக்க வர்த்தக வலயத்திலுள்ள ஒரு சர்வதேச ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டு ஆயிரக்கணக்கான வேலை இழப்புகள் ஏற்பட்டிருப்பது, அரசாங்கம் ஒரு சாதகமான வணிகச் சூழலைப் பராமரிக்க இயலாமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
அதிக வரிகள், அதிகரித்து வரும் வலுசக்தி செலவுகள், வரி அதிகரிப்பு, கொள்கை உறுதியற்ற தன்மை மற்றும் தொழிற்சங்க இடையூறுகள் ஆகியவை முதலீட்டாளர் சமூகத்தினரிடையே எதிர்மறையான உணர்வை உருவாக்கியுள்ளன.
முதலீடுகளை அதிகரிப்பதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதிமொழிகள் இருந்தபோதிலும், அரசாங்கம் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், நீண்டகால முதலீட்டாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதிலும் தோல்வியடைந்துள்ளது.
மேலும் பல முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கு முன்பு, நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் முதலீட்டாளர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் விரைவாகச் செயல்பட வேண்டும்.