Sunday, July 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முன்னாள் பொலிஸ்மா அதிபர் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியை, மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக, மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்கு விடயங்களை அறிக்கைப்படுத்தியதன் பின்னர், குறித்த துப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை பகுப்பாய்வாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக, மாலபே – தலாஹேனவிலுள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும், வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளை மையப்படுத்தியும் பொலிஸ் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மாலபே – தலாஹேனவிலுள்ள தமது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவரது மார்பின் வலது பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் பதிவாகியிருந்தது.

தனது மெய்ப்பாதுகாவலரின் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சி.டி. விக்ரமரத்னவின் மனைவியிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.

இதன்போது, மகனின் நீதிமன்ற விவகாரம் ஒன்று காரணமாக தனது கணவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவர் காவல்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகளை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவரது பூதவுடலை கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments