Tuesday, September 1, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மகள்களின் கல்விக்காக வெறும் காலில் ஓடி வெற்றி பெற்ற தாய்

மகள்களின் கல்விக்காக வெறும் காலில் ஓடி வெற்றி பெற்ற தாய்

மகள்களின் உயர்கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் காலணிகள் இன்றி வெறும் காலில் மாரத்தான் ஓடி முதலிடத்தைப் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம், அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர் என்ற பெண்ணே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் இடம்பெற்ற விபத்தில் கணவரை இழந்த பின்னர், தனது இரண்டு மகள்களையும் தனியாக வளர்த்து வருகிறார். விவசாயக் கூலி வேலை செய்து வந்த அவர், தனது மகள்கள் இருவரும் கல்வி கற்று உயர் பதவிகளை அடைய வேண்டும் என்ற இலக்குடன் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

மூத்த மகளை போட்டித் தேர்வு பயிற்சி நிலையத்தில் சேர்த்த அவர், மகளின் கல்விச் செலவுக்கு உதவும் வகையில் அதே நிலையத்தில் சமையல் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற ‘அமிர்த தௌட்’ என்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மகள்களுக்கான புத்தகங்களை வாங்குவதற்கு இந்தப் பணம் உதவும் என கருதிய ரமாபாய், போட்டியில் பங்கேற்றுள்ளார்.

மாரத்தான் போட்டியில் ஏனையவர்கள் விளையாட்டு உடைகளுடன் பங்கேற்ற நிலையில், ரமாபாய் சேலை அணிந்து ஓடினார். போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் அவரது செருப்புகள் நழுவியதால், அவற்றைக் கழற்றி கையில் பிடித்துக்கொண்டு வெறும் காலில் ஓடத் தொடங்கினார்.

கற்கள் நிறைந்த சாலையையும் பொருட்படுத்தாமல் ஓடிய அவர், ஏனைய போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.

மகள்களின் எதிர்காலத்திற்காக கடுமையான சூழலிலும் விடாமுயற்சியுடன் போராடி வெற்றி பெற்ற ரமாபாயின் செயல், அங்கிருந்த பார்வையாளர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments