திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக புளியூத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் வறண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாததால் குளத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், இதனால் குளத்தை நம்பி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குளத்து நீரை கால்நடைகளுக்கு பயன்படுத்தி வந்த கால்நடை வளர்ப்பாளர்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.
குளம் முற்றாக வறண்டு போனால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, நிலவும் வரட்சியைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான நீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


