ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனம் இன்று வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாடுகளும் பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் உள்ள நிலையில், நீண்டகாலமாக பிரிட்டனில் இருந்து விலகி தனி அரசியல் பாதையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அங்கு நிலவி வருகின்றன.
சமீபத்திய தேர்தல்களில் பிரிவினையை ஆதரிக்கும் கட்சிகள் இந்த மூன்று நாடுகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன. ஸ்காட்லாந்தில் எஸ்.என்.பி., வேல்ஸில் பிளெய்ட் சிம்ரு மற்றும் வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் ஆகிய கட்சிகள் செல்வாக்குடன் உள்ளன.
இந்நிலையில், வேல்ஸ் தலைநகர் கார்டிப்பில் இன்று நடைபெறும் முக்கிய சந்திப்பில் மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதன்போது, பிரிட்டனில் இருந்து பிரிவது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான உரிமையை கோரி கூட்டு பிரகடனத்தில் அவர்கள் கையெழுத்திடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுதந்திரம் கிடைத்தால் ஸ்காட்லாந்தும் வேல்ஸும் தனிநாடுகளாகச் செயல்பட வேண்டும் என்பதும், வடக்கு அயர்லாந்து அயர்லாந்து குடியரசுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதும் பிரிவினைவாத கட்சிகளின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
இதனிடையே, ஸ்காட்லாந்தில் மற்றொரு சுதந்திரப் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு மக்களிடையே தெளிவான ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதாக பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், வடக்கு அயர்லாந்து அயர்லாந்து குடியரசுடன் இணைவதை விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமை டப்ளினுக்கு சென்றிருந்த அவர், வடக்கு அயர்லாந்து அயர்லாந்து குடியரசுடன் இணைவது சிறந்த விடயமாக இருக்கும் என்றும், “இதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


