நாட்டில் அரசாங்கமும், எதிர்க்கட்சியும், 220 இலட்சம் மக்களும் இருப்பதால், இந்த எல் நினோ – லா நினா தாக்கத்தை அனைவருமே ஒரே மட்டத்திலேயே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆகையினால் இந்த கோரமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தற்சமயம் எல் நினோவின் தாக்கமானது 100% ஆகி காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எல் நினோ, லா நினா குறித்து சர்வதேச நிறுவனங்கள் பேசுவதற்கு முன்னரே இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் நான் பேசினேன். தற்சமயம் இதனால் ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பேராசிரியர் எல். எம். அபேவிக்ரம ஆகியோர்களினது இணைத் தலைமையில் இடம்பெற்ற இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றிய கூட்ட அமர்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மனித வளம், விலங்குகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலைப் பாதுகாப்பது மிக முக்கியமான தேசியப் பாதுகாப்பு முன்னுரிமைகளாகும். மனித வளத்தையும் வன வளத்தையும் பாதுகாப்பது தேசியப் பாதுகாப்பு சார் முன்னுரிமையாகும்.
இந்த தேசியப் பாதுகாப்பு முன்னுரிமை இலக்குகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பேதங்களின்றி, வெளிப்படைத்தன்மையுடன் தேசிய உரையாடலொன்றை ஆரம்பிப்பதுடன், தேசிய உரையாடல் திட்டமொன்றிற்காக இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் முன்னின்று உழைக்குமெனவும் கூறியுள்ளார்.
வாக்களிக்கும் உரிமை இல்லாத விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.
மக்கள் மாத்திரமன்றி, வாக்களிக்கும் உரிமை இல்லாத விலங்குகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். அது மனித வளத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் இன்றியமையாதது.
உலகளாவிய அனர்த்த அபாயங்கள் கிடைத்தவுடன், துரிதமான வெளியேற்றத் திட்டமொன்று தேவை.
அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாட்டின் அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறை சிறப்பான சேவைகளை ஆற்றி வருகின்றது. அதுபோன்று முன்கூட்டியே பதிலளிக்கும் முறையொன்றை ஸ்தாபிக்க வேண்டும். முன்னரே அபாயகரமான சூழ்நிலை ஏற்படக் கூடிய தகவல்கள் முன்அறிவிப்புகள் கிடைக்கப்பெற்றால் அதற்குப் பதிலளிக்கும் முறையொன்றை இங்கு உருவாக்க வேண்டும். உலகளாவிய அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டவுடன் துரிதமான வெளியேற்றச் செயற்பாடு அவசியமாகும்.
இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் மாதத்திற்கு இருமுறை கூடுகின்றன. சுற்றாடல்சார் நிலைமைகளுக்கு முன்னுரிமைகளைப் பெற்றுக் கொடுத்து, தேசிய நிகழ்ச்சி நிரலுக்குள் இதற்கு முன்னுரிமையொன்று காணப்பட வேண்டும்.
முன்னேற்பாடான அனர்த்த முகாமைத்துவத் திட்டமொன்று அவசியமாகும்.
எல் நினோ – லா நினா காரணமாக உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிலும் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய்ந்து, மனிதர்களுக்கு, வனங்களுக்கு, சுற்றாடலுக்கு, வனவிலங்குகளுக்கு, பல்லுயிர் பெருக்கங்களுக்கு, குடிநீருக்கு, நீர்ப்பாசனத்துக்கு, உணவுப் பாதுகாப்புக்கு மற்றும் வலுச்சக்திப் பாதுகாப்பு என்பவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்னாயத்த ஏற்பாடுகள் எம்மிடம் காணப்பட வேண்டும்.
நமது நாட்டில் அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் நிவாரணங்களை முன்னெடுக்கும் பணிகள் மாத்திரமே நடக்கின்றன. எமது நாட்டிற்கு முற்கூட்டியே அனர்த்த எதிர்வினைத் திட்டமொன்று அவசியமென அவர் மேலும் தெரிவித்தார்.


