ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவர் மாத்தறை, தெனியாய பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழகத்தின் 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற மாணவியாவார்.
உயிரிழப்பதற்கு முன்னர், தனது மிக நெருங்கிய தோழி ஒருவருக்கு வட்ஸ்அப் செயலி மூலம் இறுதிச் செய்தி ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.
அதில், “நான் இறக்காமல் உயிரோடு இருந்தால் நிச்சயம் வருவேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தலியின் மறைவு குறித்து அவரது சக மாணவ, மாணவிகள் மற்றும் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவுகளை இட்டுத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருவதுடன், இதுபோன்றதொரு அகால மரணம் இனி எவருக்கும் ஏற்படக் கூடாது என்றும் பிரார்த்தித்துள்ளனர்.
இன்னுமொரு மாணவரின் விலைமதிப்பற்ற உயிர் இந்த கொடிய டெங்கு நோய்க்குப் பலியாகும் வரை அதிகாரிகள் காத்திருக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் வலியுறுத்திள்ளனர்.
எனவே, அனைத்து பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் விடுதிப் பகுதிகளை உள்ளடக்கியதாகத் தீவிர டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு அவர்கள் அதிகாரிகளிடம் பலத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, தற்போது மாத்தறை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் அனைத்தும் டெங்கு நோய் பரவும் அதிக அபாய வலயப் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
எனவே, தங்களது பிள்ளைகள் மற்றும் அன்பானவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காகஇ பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றியுள்ள சூழலை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனச் சுகாதார அதிகாரிகள் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


