முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மீதான விசாரணைகளை, எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் பின்னணியில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவானது மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இன்றைய மனு பரிசீலனையின் போது பல புதிய மற்றும் மேலதிக சட்டச் சமர்ப்பணங்களை நீதியரசர்கள் முன்னிலையில் முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், இந்த மனு தொடர்பான மேலதிக சட்ட விவாதங்களை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளது.


