விரிவாக்கப்பட்ட “Greater BRICS” நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) பல புதிய திட்டங்களை முன்மொழிந்துள்ளார்.
நியூடெல்லியில் நடைபெற்ற BRICS உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய ஷி ஜின்பிங், அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் பொருளாதாரம், வர்த்தகம், நிதி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதன் ஒரு முக்கிய அம்சமாக, BRICS AI Open Source Zone ஒன்றை உருவாக்க சீனா முன்னிலை வகிக்கும் என அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் பெரிய மொழி மாதிரிகள் (LLMs), AI பயிற்சி மற்றும் திறந்த AI சூழலியல் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், BRICS நாடுகளின் சிறப்பு பொருளாதார வலயங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் திட்டத்தையும் ஷி ஜின்பிங் முன்மொழிந்துள்ளார்.
அத்துடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு சீனாவில் BRICS Service Trade Forum ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதுடன், BRICS நாடுகளுக்கு இடையில் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.


