ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ஓரணியில் இணைப்பதற்கான பேச்சுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டமைதான் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. எனவே, எதிர்கால அரசியல் தேவைகளைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினரையும் ஒரே முகாமாக இணைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பேச்சுகள் சுமுகமாக இடம்பெற்று வருகின்றன.
மேலும், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான நேரடிச் சந்திப்புகள் அண்மையில் இடம்பெற்றுள்ளன என்றும், கட்சியின் செயலாளர்கள் மட்டத்திலும் தொடர் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


