“வளமான நாடு – அழகான வாழ்க்கை என்பது தெற்கைப் போன்றே வடக்கு மக்களுக்கும் சமமாக உரித்தாக்கப்பட வேண்டும்” என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – தசாப்த கால யுத்தச் சூழலின் பின்னர் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவடைந்து, விளையாட்டுத் துறையில் முற்றாகக் கைவிடப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புதியதொரு விளையாட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று (03) பிரதான விளையாட்டு மைதானங்களை புனரமைத்து தேசிய மட்டத்திற்கு உயர்த்துவதற்கான மகா திட்டத்தின் பணிகள் நேற்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்சுனில் குமார கமகே மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டன.
இங்கு உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடந்த காலங்களில் வட மாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறையில் நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


