செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுகளின் போது, கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளை ஒப்பிட்டுத் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37 ஆவது நாளில், கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையிலான என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டது. இதன் தாடை பிளவடைந்த நிலையிலும் காணப்பட்டது.
இந்த என்புத் தொகுதி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வுகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அது அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இந்த என்புத் தொகுதியுடன் சான்றுப்பொருள்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனினும், இதன் பின்னால் மேலும் இரண்டு என்புத் தொகுதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமையால், அது தொடர்பான ஆய்வுகள் எதிர்வரும் நாள்களில் இடம்பெறவுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வின்போது இதேபோன்று (கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில்) கண்டெடுக்கப்பட்ட என்புத் தொகுதியையும், தற்போதைய மூன்றாம் கட்டத் தொகுதியையும் ஒப்பிட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த ஆய்வுகளுக்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கைகள் பீடத்தின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


