நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பொலிஸ் அதிகாரியொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனமல்வில, கடவத்த மற்றும் மொணராகலை பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
தனமல்வில – அம்பேகமுவ வீதியின் அரம்பேகெம பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 43 வயதுடைய பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
கடவத்த நகர வெளிவட்ட வீதியில் வேன் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய குறித்த நபர் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை – பதுளை வீதியின் தொலொபோவத்தை பகுதியில் முச்சக்கரவண்டியும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் மோதியதில், முச்சக்கரவண்டியில் பயணித்த 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.


