மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில், 1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 2025 ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு சட்ட மாஅதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைச் சீர்திருத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


