Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி

எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி

நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தி இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் நெருக்கமாக இருந்து வருகிறார். இதனை வைத்து ஆர்த்தி, அவரது தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா, ரவி மோகன், கெனிஷா என மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே
தற்போது ஆர்த்தி புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது : கண்ணியமாக இருக்க நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்தக் காலத்தில் என்னைச் சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள், வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படிச் செய்துவிட்டது. எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது வெளியில் இருந்து வந்த ஒருவர் தான்.

‘உங்கள் வாழ்வின் ஒளி’ என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர், சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யும் முன்பே எங்கள் வாழ்கையில் வந்துவிட்டார். எனக்கு ‘கட்டுபடுத்திய மனைவி’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. என் கணவரை அன்பாக பார்த்து, அவரை தீய பழக்க வழக்கங்களிலிருந்தும் பாதுகாத்து கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால், அப்படியே இருக்கட்டும். எந்த ஒரு உண்மையான மனைவி தன் கணவரின் நலனுக்காக எதைச் செய்வாரோ அதேயே நானும் செய்தேன். அதற்காக தவறான பட்டங்களை சுமக்கிறேன்.

அவரின் வீட்டு கதவை தட்டியது ஏன்?
உண்மையில் என் பிடியிலிருந்து தப்பிச் செல்ல நினைத்தவர் அவரது பெற்றோர் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் பிரச்னையை உண்டாக்கியவரின் வீட்டு கதவை தட்டியது ஏன்.? இன்று என் பிள்ளைகள் படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் துன்புறுத்தியதாக சொல்வது மனம் வலிக்கிறது.

15 ஆண்டுகள் அவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எனது கனவுகள், லண்டனில் பெற்ற முதுகலைப் பட்டம், லட்சியம் என அனைத்தையும் துறந்து வாழ்ந்தேன். வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்தவர் அதை மீறவிட்டார். அவருக்காக வாழாமல் எனக்காகவும் என் லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்திருந்திருந்தால் இதைவிட இருமடங்கு வசதியான, உயர்வான ஒரு வாழ்கையை வாழ்ந்திருப்பேன்.

நாங்கள் இதுவரை எடுத்த அனைத்து பொருளாதார முடிவுகளும் இருவரும் சேர்ந்து எடுத்தவைகளே. அதற்கான ஆதாரங்கள் உள்ளன அவை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும். என் தனிப்பட்ட பிரச்னையை பொதுவெளியில் கூறுவதற்காக என் பிள்ளைகள், குடும்பத்தார், நண்பர்களிடம் மன்னிக்க வேண்டுகிறேன். என் சுயகவுரவத்திற்காக இதை செய்ய வேண்டி உள்ளது.

சட்டத்தை நம்புகிறேன்
இத்தனை ஆண்டுகள் உங்களுக்காக வாழ்ந்த ஒருத்தியை உதறித்தள்ள முடிவு எடுத்த நீங்கள், அதை கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம். அப்படி செய்யாதது வேதனையாக உள்ளது. எல்லா உண்மையும் தெரிந்த என் கணவரே எனக்காக மறுக்கிறார். அவருக்கு நிம்மதி கிடைக்க விரும்புகிறேன். ஆனால் உங்களுக்கு துணை நின்ற ஒருவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் அது கிடைக்காது.

நான் பலவீனமானவள் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன். ஒரு போதும் தாழ்ந்து போக மாட்டேன். இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை. ஏனென்றால் நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கக் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments