மதுரை – பாலமேட்டில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று (மாட்டுப் பொங்கல்) காலை கோலாகலமாகத் தொடங்குகின்றன. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்கவுள்ளார். “எங்கட வீரர்களின் கௌரவத்தை” நிரூபிக்க வாடிவாசலில் காளைகளும், வீரர்களும் தற்போது தயார் நிலையில் உள்ளனர்.
நேற்று அவனியாபுரத்தில் நடந்த அதிரடிப் போட்டியைத் தொடர்ந்து, இன்று பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்றுத் திடலில் களம் சூடுபிடிக்கிறது. ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த 5,757 காளைகளும், 1,913 மாடுபிடி வீரர்களும் இன்று மல்லுக்கட்டவுள்ளனர். தகுதிப் பரிசோதனைகளுக்குப் பிறகு மிகச்சிறந்த காளைகளும், வீரர்களும் மட்டுமே களம் காண அனுமதிக்கப்படுகின்றனர்.
மைதானத்தில் பார்வையாளர்களுக்காக விசேட மாடங்கள் மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. “வீரர்களுக்குக் காயமேற்பட்டால் உடனடிச் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும், காளைகளுக்குப் பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர்” என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, நாளை (ஜனவரி 17) உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கும், பிடிகொடுக்காத காளைகளுக்கும் கார், மோட்டார் சைக்கிள் எனப் பரிசுகள் மழையாகக் கொட்டக் காத்திருக்கின்றன.


