தமிழக மக்களின் இதயக் கனியாகவும், முன்னாள் முதலமைச்சராகவும் திகழ்ந்த பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) 109-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ‘புரட்சித் தலைவருக்கு’ பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தங்கள் நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தனித்துவமான ஆளுமை கொண்ட எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தைப் உலகெங்கும் கொண்டு சேர்த்ததிலும் அவரது பங்கு அளப்பரியது. சமூகத்தின் நலிந்த பிரிவினருக்காக அவர் கண்ட கனவுகளை நனவாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார். ஏழைகள் மற்றும் பெண்களின் நலனில் எம்.ஜி.ஆர் காட்டிய அக்கறையை பிரதமர் தனது செய்தியில் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
அரசியல் களத்தில் மட்டுமல்லாது, திரையுலகிலும் எம்.ஜி.ஆரின் தாக்கம் இன்றும் நீடிக்கிறது. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், “எங்கள் படத்திற்கு உந்துசக்தியாக இருந்த நிஜ நாயகன் எம்.ஜி.ஆருக்கு தலைவணங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளது. பழம்பெரும் ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ போன்ற காவியப் படங்களை நினைவு கூர்ந்து தனது மரியாதையைச் செலுத்தியுள்ளது.
மேலும், நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு சுந்தர், “மக்களின் தலைவன், ஏழைகளின் ராபின் ஹூட், ஒரு சிறந்த ராஜதந்திரி” என எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக முதலமைச்சராகப் பணியாற்றி, சத்துணவுத் திட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்கள் மூலம் இன்றும் மக்களின் மனதில் ‘வாத்தியாராக’ வாழ்ந்துகொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் புகழ், தலைமுறை கடந்தும் நிலைத்திருக்கிறது.


