முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் யோஷிதவின் பாட்டியான டேய்ஷி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, நிதித்தூய்தாக்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களும் பிரதிவாதிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால், விசாரணைக்கான திகதியை அறிவிக்க முடியும் என பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, அது தொடர்பான தமது தரப்பு சமர்ப்பணங்களை விரைவில் மன்றில் முன்வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி வழக்கை டிசம்பர் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்குடன் தொடர்புடைய சமர்ப்பணங்களை அன்றைய தினம் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.
2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் மூன்று தனியார் வங்கிகளில் 59 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பணத்தை வைப்பிலிட்டமை தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


