உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று மீண்டும் பல நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக 2 வகை கொரோனா மாறுபாடு வைரஸ்களை உலக சுகாதார நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.அந்தவகையில் என்பி.1.8.1 மற்றும் எல்எப்.7 ஆகிய 2 கொரோனா திரிபு வைரஸ்களால் இந்த பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது.
இந்த 2 வகை கொரோனாவும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதன்படி என்பி.1.8.1. வைரஸ் கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கும், எல்எப்.7 வகை வைரஸ் குஜராத்தில் 4 பேருக்கும் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மாறுபாடுகள் கண்காணிப்பின் கீழ்தான் இருப்பதாகவும், அவை அபாயமானவையாக இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.