மழையால் கைவிடப்பட்ட போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பியளிக்கப்படும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நேற்று (மே 17) நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியேறியது.
மழையால் போட்டி கைவிடப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், மழையால் கைவிடப்பட்ட போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பியளிக்கப்படும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மோசமான வானிலை காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி கைவிடப்பட்டது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பியளிக்கப்படும்.
ஆன்லைனில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு அவர்களது கணக்கில் 10 வேலை நாள்களுக்குள் பணம் திருப்பியளிக்கப்படும். நேரடியாக டிக்கெட் வாங்கியவர்கள் அவர்களது உண்மையான டிக்கெட்டினைக் காட்டி டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.