கொழும்பு – கொட்டாவை, ருக்மல்கம வீதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் யுவதி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக கொட்டாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொட்டாவை, ருக்மல்கம வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று, உயிரிழந்த யுவதியின் தாயும், சகோதரர்கள் இருவரும் வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை (12) இரவு வெளியே சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டில் யுவதி மாத்திரமே இருந்துள்ளதாகவும் திடீரென வீடு முழுவதும் தீ பரவியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து வீட்டில் பரவிய தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
வீட்டில் தீ பரவியமைக்காக காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் யுவதியின் மரணம் குறித்து சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கொட்டாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.