சந்தானம் நடித்துள்ள ‘தில்லுக்கு துட்டு’ என்ற படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. இந்த படங்களை ஆர்.கே.எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்தது. தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் 3ம் பாகமாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிற 16ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி ஆர்.கே.எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், “டி.டி. நெக்ஸ்ட் லெவல் படத்தின் தலைப்பு, இதற்கு முன்பு எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களின் தொடர்ச்சியாகும். எங்களிடம் அனுமதி பெறாமல் இந்த தலைப்பை பயன்படுத்தியுள்ளனர். இது காப்புரிமை சட்டத்தை மீறிய செயலாகும், எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் ஆர்யா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது. இதனால் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ வெளிவருவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.