சிவா ஆறுமுகம் இயக்கத்தில் தேவயானி நடிப்பில் இந்த வாரம் வெளியாகும் படம் நிழற்குடை. ஒரு குழந்தைக்கும், தேவயானிக்குமான பாசமே படத்தின் கதை. பெற்றோர்களை மதிக்க வேண்டும். அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டாம். வேலைக்கு போகும் கணவன், மனைவி வீட்டில் உள்ள குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். பணத்தை நோக்கி ஓடாமல், பாசமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை சொல்கிறது.
இதில் இலங்கை தமிழ் பேசி நடித்துள்ளார் தேவயானி. டூரிஸ்ட் பேமிலி படத்தில் சிம்ரன் இலங்கை தமிழ் பேசினார். அதை தொடர்ந்து இந்த படத்திலும் இலங்கை போர் காலத்தில் குடும்பத்தை இழந்து, இந்தியா வந்து ஒரு ஆசிரமத்தில் வேலை செய்பவராக தேவயானி கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இனி தொடர்ந்து நிறைய படங்களில் நடிப்பேன். சின்ன பட்ஜெட் படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். படம் பிக்அப் ஆகும் முன்பே அந்த வகை படங்களை தியேட்டர்காரர்கள் துாக்கிவிடக் கூடாது. இந்த படத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள், இன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையானது. என் மகள்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளேன். நடிப்பு உட்பட எதை தேர்ந்தெடுத்தாலும், அவர்கள் சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என்பது என் விருப்பம் என்று படம் குறித்து தேவயானி உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார்.