Sunday, March 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்தென்கொரியாவில் பயங்கர காட்டுத்தீ: 4 பேர் பலி - பேரிடர் நிலை அறிவிப்பு

தென்கொரியாவில் பயங்கர காட்டுத்தீ: 4 பேர் பலி – பேரிடர் நிலை அறிவிப்பு

தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதை அடுத்து, அந்நாட்டில் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன் தினம் (மார்ச் 21) மாலை 3 மணியளவில் காட்டுத் தீ உருவாகி அப்பகுதி முழுவதும் பரவியது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் தீயணைப்புப் படையினர் அந்த தீயை அணைக்க கடுமையாக போராடி வரும் நிலையில் நேற்று (மார்ச் 22) மாலை 3 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) 65 சதவிகித நெருப்பு அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சுமார் 290 ஹெக்டேராக விரிவடைந்துள்ள நிலையில் அப்பகுதியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்று வெவ்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தென்கொரிய வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தீயை அணைக்க டஜன் கணக்கான வாகனங்களையும் நூற்றுக்கணக்கான அதிகாரிகளையும் குவித்துள்ளதாக வனத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தென்கிழக்கு நகரமான உல்சானிலும் அருகிலுள்ள கியோங்சாங் மாகாணத்திலும் சுமார் 620 பேர் நேற்று காட்டுத் தீயில் இருந்து தப்பித்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேவையான அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தி அந்த காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு மீட்புப் படைகளுக்கு தென் கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சங்-மோக் உத்தரவிட்டுள்ளார். இந்தக் காட்டுத் தீயை முழுவதுமாக அணைத்த பின்னர் அது உண்டானதற்கான காரணம் குறித்த விசாரணையை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments