துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசிய கோப்பை 2026 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது 8வது ஆசிய கோப்பை பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் களத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் இந்த வெற்றிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய மகளிர் அணியின் இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெருமையான தருணம். தொடர் முழுவதும் இந்திய மகளிர் அணியின் தன்னம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் விளையாட்டுத்திறன் வெளிப்பட்டது.
இந்த வெற்றி நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க பெரும் ஊக்கமாக அமையும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தளப் பதிவில், “மகளிர் டி20 ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தொடர் முழுவதும் தோல்வியடையாமல் விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக நாட்டின் மகள்களுக்கு இவர்கள் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்,” என பாராட்டியுள்ளார்.
பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்திய அணியின் இந்த சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


