பிரான்ஸின் பிரெஞ்சு ரிவியரா பகுதியில் உள்ள ரெனுவார் அருங்காட்சியகத்தில் புகுந்த கொள்ளையர்கள் மூன்று அரிய ஓவியங்களை திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
காக்ன்-சுர்-மெர் நகரில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்துக்குள் அதிகாலை 6 மணிக்கு சற்று முன்பாக இருவர் நுழைந்து நான்கு ஓவியங்களை எடுத்துச் சென்றதாக நகர மேயர் பிரையன் மாசன் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு கமராக்கள் மூலம் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, பொலிஸார் அவர்களைத் துரத்தினர். இதன்போது கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற ஓவியங்களில் ஒன்றை கைவிட்டுவிட்டு தப்பியோடியதுடன், ஏனைய மூன்று ஓவியங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட ஓவியங்களின் சரியான விபரங்கள் இதுவரை அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. எனினும், திருடப்பட்ட கலைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 9 மில்லியன் யூரோக்கள் என பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1960ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரெனுவார் அருங்காட்சியகம், புகழ்பெற்ற பிரெஞ்சு இம்பிரஷனிஸ்ட் ஓவியரான பியர்-ஆகஸ்ட் ரெனுவாரின் முன்னாள் இல்லத்தில் அமைந்துள்ளது. இங்கு ரெனுவாரின் 13 ஓவியங்கள் உட்பட சுமார் 40 சிற்பங்கள், தளபாடங்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், பிரெஞ்சு பொலிஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் காக்ன்-சுர்-மெர் நகரின் வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியத்தின் மீதான தீவிர தாக்குதல் என நகர மேயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


