சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் போல் தம்மை அடையாளம் காட்டி, பிரேசில் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
காலி – தல்பே பகுதியில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த பிரேசில் நாட்டுப் பயணியின் அறையை, சுற்றுலா காவல்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர் சோதனையிட்டனர்.
அவரிடம் இருந்த கடவுச்சீட்டு, பயண ஆவணங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்த அவர்கள், பின்னர் மூன்றாவது நபர் ஒருவருடன் இணைந்து அந்தப் பயணியைக் கைவிலங்கிட்டு மிரட்டியுள்ளனர்.
கொழும்பில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி, 3 மில்லியன் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயணியிடமிருந்து ஏற்கனவே 200,000 ரூபாயைப் பறித்திருந்த நிலையில், மீதிப் பணத்தைக் கோரியுள்ளனர்.
இது குறித்துக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, உனவடுன சுற்றுலா பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 25 மற்றும் 26 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


