கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
TK-731 என்ற இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று (11) காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோதே இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்காக நீர்கொழும்பு களப்பிற்கு அருகில் மிகவும் தாழ்வாகப் பறந்து, எரிபொருளைக் குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏ330 (A330) ரகத்தைச் சேர்ந்த இந்த அகலமான உடல் அமைப்பைக் கொண்ட பயணிகள் விமானம், இன்று காலை 10:24 மணிக்குத் தரையிறக்கப்பட்டது.
246 பயணிகளும், பணிக்குழாமினரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரநிலையை எதிர்கொள்வதற்காக விமான நிலைய நிர்வாகத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.


