சர்வாதிகார ஆட்சிக்கு பெயர் பெற்ற வட கொரியாவில் மக்களின் அன்றாட வாழ்வில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முடி வெட்டும் முறை முதல் தொலைக்காட்சி பார்ப்பது வரை அரசு தீர்மானிக்கிறது.
இதன் உச்சமாக, தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதற்கோ பகிர்வதற்கோ மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் ஜெனீவாவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2014 முதல் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300க்கும் மேற்பட்டோர் மற்றும் நேரடி சாட்சிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 14 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதில், 2015க்குப் பின் கொண்டு வரப்பட்ட புதிய சட்டங்கள் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளதையும், மரண தண்டனைகள் பல மடங்கு உயர்ந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையர் ஜேம்ஸ் ஹீனன், “கோவிட்-19க்கு பின் மரண தண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கே-டிராமாக்கள் உட்பட வெளிநாட்டு தொடர்களை விநியோகித்த பலர் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
ஆனால், வட கொரியா இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரித்து, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தை எதிர்த்துள்ளது.


